தஞ்சாவூர்: சிறு வயதில் தனக்குப் பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியரை தேடிச்சென்று நன்றி தெரிவித்துள்ளார் மலேசியாவின் சரவாக் மாநில துணை முதல்வர் அவாங் தெங்கா அலி ஹஸன்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியில் வசித்து வரும் 89 வயதான அப்துல் லத்தீப் 55 ஆண்டுகளாக மலேசியாவில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவரது மாணவர்களில் துணை முதல்வரும் ஒருவர்.
தனது ஆசிரியர் வசிக்கும் இடம் குறித்து தகவல் அறிந்த துணை முதல்வர் அவரைச் சந்திப்பதற்காக குடும்பத்துடன் பாபநாசம் வந்து சேர்ந்தார். பின்னர் ஆசிரியர் அப்துல் லத்தீப் வீட்டிற்குச் சென்ற அவர், அங்கு தனது குடும்பத்தினரை ஆசிரியருக்கு அறிமுகம் செய்து வைத்து, புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
தமக்குப் பள்ளியில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரை 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட துணை முதல்வர், 1968ஆம் ஆண்டில் அப்துல் லத்தீ்ப் ஆசிரியராக இருந்தபோது பலருக்கும் நிறைய உதவிகளைச் செய்ததாகக் கூறினார்.

