தமிழக விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி

2 mins read

சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல்

சென்னை: வேளாண் துறை­யில் புதிய தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பில் தமிழக விவ­சா­யி­க­ளுக்கு வெளி­நா­டு­களில் பயிற்சி அளிக்­கப்­படும் என தமி­ழக அ­ரசு அறி­வித்­துள்­ளது.

தமி­ழக வேளாண் நிதி­நிலை அறிக்­கையை சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று அத்­து­றை­யின் அமைச்சர் எம்­ஆர்கே பன்­னீர் செல்­வம் தாக்கல் செய்­தார். அப்­போது பல்­வேறு முக்­கிய அறி­விப்­பு­களை அவர் வெளி­யிட்­டார்.

விவ­சா­யி­க­ளுக்கு வெளி­நாடு­களில் பயிற்சி, பள்ளி மாண­வர்­க­ளுக்கு பண்­ணைச் சுற்றுலா, மாநில அள­வில் அதிக விளைச்சல் பெறும் விவ­சா­யி­களுக்கு தலா ஐந்து லட்­சம் ரூபாய் பரிசு, உணவு தானி­யப் பயிர்­கள் உற்­பத்தி, உற்­பத்­தித் திற­னில் சிறந்து விளங்­கும் களப்­பணி­யா­ளர்­கள், வட்­டார அலு­வ­லர்­கள், மாவட்ட அலு­வ­லர்­களை ஊக்­கப்­ப­டுத்­தும் வித­மாக வரும் ஆண்டு முதல் விருதுகள் உள்­ளிட்ட அறி­விப்பு­கள் நிதி­நிலை அறிக்­கை­யில் இடம்­பெற்­றுள்­ளன.

23 லட்­சம் இல­வச மின் இணைப்­பு­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் இத்­திட்­டத்­துக்­காக ரூ.6,536 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்­சர் பன்­னீர்­செல்­வம் அறி­வித்­தார்.

150 முன்­னோடி விவ­சா­யி­களை இஸ்­ரேல், நெதர்­லாந்து, தாய்­லாந்து, எகிப்து, மலே­சியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடு­களுக்கு அழைத்­துச் செல்ல திட்­ட­மி­டப்­பட்டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர், இதற்­காக மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­படும் என்­றார்.

"அயல்­நா­டு­கள் சில­வற்­றில் உயர்­ரக தொழில்­நுட்­பம் பயன்­படுத்­தப்­பட்டு உற்­பத்­தித் திறன் அண்­ணாந்து பார்க்­கும் நிலையில் இருப்­ப­தைக் காண முடி­கிறது. அங்­கி­ருக்­கும் தொழில்­நுட்­பங்­களை நம் மாநில உழ­வர்­களும் அறி­வது. அவர்­க­ளுக்­குள் ஊக்­கத்தை உண்­டாக்­கும். பிறகு மனதில் தங்கி, தாக்­கத்தை உண்­டாக்­கும்.

"நாமும் அப்­படி உற்­பத்தி செய்ய முடி­யாதா என்­கிற ஏக்கத்தை ஏற்­ப­டுத்­தும். அது சாகு­ப­டி­யில் இருக்­கும் தேக்­கத்தை நீக்கி தேடலை உண்­டாக்­கும். அவர்­கள் தங்­கள் நிலங்­களில் அத்­த­கைய முயற்­சியை மேற்­கொள்­வார்­கள்," என்­றார் அமைச்­சர் பன்­னீர்­செல்­வம்.

சிறு, குறு விவ­சா­யி­கள், நில­மற்ற வேளாண் தொழி­லா­ளர்­களுக்கு வரும் ஆண்­டில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் 60,000 வேளாண் கரு­வி­கள் தொகுப்பு விநி­யோ­கம் செய்­யப்­படும் என்­றும் வேளாண்மை, தோட்­டக்­கலை தொடர்­பான பட்­டப்­ப­டிப்பு படித்த 200 இளை­யர்­க­ளுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்­சம் வீதம் நிதி­யு­தவி வழங்­கப்­படும் என்­றும் அரசு அறி­வித்­துள்­ளது.

பாடப் புத்­த­கங்­களில் பட­மா­க­வும் ஊட­கங்­களில் காணொ­ளி­யா­க­வும் கண்ட வயல்­கள், தோப்­பு­கள், பாச­னக் கிண­று­களை மாண­வர்­கள் நேர­டி­யாக காண­வும் வேளாண்­மை­யின் மகத்­து­வத்தை அறிந்து உண­ர­வும் பண்ணைச் சுற்­றுலா திட்­டம் கல்­வித் துறையுடன் இணைந்து செயல்­ப­டுத்­தப்­படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.