புதுடெல்லி: வடசென்னையில் புதிய கடற்கரைப் பகுதி உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வடசென்னையில் உள்ள காசிமேடு பகுதியில் இந்தப் புதிய கடற்கரை உருவாக்கப்படும் என்றும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இதற்கான ஆய்வை மேற்கொள்ளும். மூத்த அதிகாரிகள் காசிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு புதிய கடற்கரையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர்.
சென்னையில் ஏற்கெனவே மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதிகளில் கடற்கரைகள் உள்ளன.
இந்நிலையில் காசிமேடு பகுதியில் அமைக்கப்படும் புதிய கடற்கரையானது மெரினாவைப் போல் காட்சியளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இனி வடசென்னை பகுதி மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. கடற்கரைப் பகுதியில் நடைபாதை, அமர வசதியாக இருக்கைகள் கொண்ட ஓய்வு இடம், யோகா செய்வதற்கான இடம், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சிக் கூடம், மெரினா கடற்கரையில் உள்ளதைப் போன்ற உணவுக் கடைகள் என அனைத்து அம்சங்களும் புதிய கடற்கரையில் பரவலாக அமைந்திருக்கும்," என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் புதிய கடற்கரையை உருவாக்குவதற்கான திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதிய கடற்கரை அமைய இருப்பது சென்னை மக்களை, குறிப்பாக வடசென்னைவாசிகளை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

