புதுடெல்லி: அனைத்துலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி, மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை மாணவர்கள் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளைத் தயாரித்தனர்.
அவற்றை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கடந்த பத்து ஆண்டுகளாக இக்கல்லூரி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மாணவர்கள் தயாரித்து வழங்கிய கூடுகளால் மதுரை கூடல்நகர் பகுதியில் குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
"சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் 13 ஆண்டுகள்தான். நமது வீடுகளில் பாதுகாப்பான இடத்தில் கூடுகட்டி வசிக்கும். முன்பு கூரை, ஓட்டு வீடுகளில் அதிகளவில் வசித்தன.
"தற்போது அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாறி வருவதால் சிட்டுக்குருவிகளால் அங்கு வாழ முடியவில்லை. சிட்டுக்குருவி இனம் அழிய கைபேசி கோபுரங்கள் காரணமில்லை. உரம், பூச்சி மருந்துகள் ஆகியவை அவை அழிய காரணமாகிவிட்டன," என்றார் முதல்வர்,
உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி அவற்றைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக இளையர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

