குமரி: நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பிரதாப் லிவி விவசாயத்தைக் காக்க வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை குடும்பத்துடன் மாட்டு வண்டியில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதாப்புடன் அவரது மனைவி, குழந்தைகளும் இணைந்துள்ளனர். கடந்த ஜனவரி 11ஆம் தேதி குமரியில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்ட பிரதாப் குடும்பத்தார், நாள்தோறும் இருபது கிலோ மீட்டர் வரை செல்கிறார்கள்.
பின்னர் மாட்டு வண்டியை நிறுத்தி, அப்பகுதியில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள பிரசாரம் செய்கிறார்கள்.
நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பிரதாப் குடும்பத்தாருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் விவசாயத்தைப் பற்றி மக்களிடம் எடுத்துரைத்து அதன் பின்னர் முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்க விரும்புகிறார் பிரதாப்.

