சென்னை: தமிழக சட்டசபையில் இணையச் சூதாட்டத் தடை சட்ட மசோதா மீண்டும் நேற்று நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய இணையச் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6ஆம் தேதி சட்ட மசோதாவை அரசுக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து இணையச் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.
அதன்படி தமிழக சட்டசபையில் இணையச் சூதாட்டத் தடை சட்ட மசோதா மீண்டும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இணையச் சூதாட்டத்தைத் தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்ததாகவும் மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக அந்தக் குழு தெரிவித்ததாகவும் கூறினார்.
"ஆகையால் இணையச் சூதாட்டத் தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும்," என்றார் முதலமைச்சர்.
சட்ட மசோதா மீண்டும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

