சென்னை: ஆசியாவிலேயே ஆகப் பெரிய தொழில்நுட்ப மையமாக தமிழ்நாட்டை ஆக்குவதே தம்முடைய இலக்கு என்றும் அதை நோக்கி தான் பாடுபடப்போவதாகவும் தமிழக முதல்வர் நேற்று தெரிவித்தார்.
இந்த இலக்கையொட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் நகர் பகுதிகளில் தொழில்நுட்ப நகரங்கள் அரசு சார்பில் தொடங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
சென்னையில் தொழில்நுட்பம், தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டு உச்சநிலை 2023 மாநாட்டை (யுமேஜின்) காணொளி வாயிலாக தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் அடையும் முன்னேற்றத்தை அதே காலத்தில் தமிழகமும் அடைய வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவு என்று தெரிவித்த திரு ஸ்டாலின், 1996ல் அப்போதைய திமுக ஆட்சியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய டைடல் பார்க் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டதைச் சுட்டினார்.
பிறகு கோயம்புத்தூரிலும் அடுத்தடுத்து பல்வேறு நகரங்களிலும் தொழில் பேட்டை உருவானதாக அவர் கூறினார்.
இவற்றின் தொடர்ச்சியாக சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் பகுதிகளில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகர்கள் தொடங்கப்படும் என்றாரவர். அந்த மூன்று நாள் மாநாட்டில் 12,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

