சென்னை: தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலக் கட்சி அங்கீகாரம் தொடர்பான விசாரணை நேற்று தொடங்கியது.
அந்த அங்கீகாரம் இருந்தால்தான் எந்த ஒரு கட்சிக்கும் அதற்கென நிரந்தரமாக ஒரு சின்னத்தை ஒதுக்க முடியும். மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால் ஒரு கட்சி தேர்தலில் குறைந்தபட்சம் 6% வாக்குகளைப் பெற வேண்டும்.
தேர்தல் ஆணையம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்குகளின் விழுக்காட்டின் அடிப்படையில் அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் அந்தத் தேர்தலில் செல்லுபடியான வாக்குகளில் 6%க்கும் குறைவான வாக்குகளையே பெற்று இருந்தன.
அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்டு கட்சி, மிசோரம் மக்கள் மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கூட்டணி, ராஷ்டீரிய லோக்தளம், பாரத ராஷ்டீரிய சமிதி ஆகிய மாநிலக் கட்சிகளும் குறைந்தபட்ச 6% வாக்கைப் பெறவில்லை.
இதையடுத்து, 'உங்கள் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது' என்று கேட்டு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அந்தக் கட்சிகளுக்குக் கடிதம் அனுப்பி இருந்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பில் கட்சி வாரியான விசாரணையை நேற்றுத் தொடங்கியது.
அதில் பாமக தன் விளக் கத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன் விளக்கத்தைப் பொறுத்தே அதன் அங்கீகாரம் தொடருமா தொடராதா என்பது விரைவில் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.

