கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, பயனீட்டை அதிகரிக்க அரசு முயற்சி
சென்னை: ஐநா உலக அமைப்பு, 2023ஆம் ஆண்டை அனைத்துலக சிறுதானிய ஆண்டாக அறிவித்து உள்ளது.
அதனை ஒட்டி, தமிழ்நாட்டில் ஐந்தாண்டு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஐந்து ஆண்டுகளில் தரிசு நிலங்கள் சீரமைக்கப்படும். மொத்தம் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்படும். சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கப்படும்.
மொத்தம் 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உருவில் சிறியதாக இருக்கும் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலான தானியங்கள் மக்களுக்கு அதிகமாகக் கிடைக்கவும் அவற்றை அதிகமாக பயன்படுத்த மக்களுக்கு ஊக்கமூட்டவும் இந்த ஐந்தாண்டு இயக்கம் இடம்பெறுவதாக சட்டமன்றத்தில் தாக்கலான புதிய வரவுசெலவுத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறுதானிய உற்பத்தி, பயனீடு இரண்டையும் அதிகரிக்கும் வகையில் முக்கிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு நிறுவனங்கள், கல்வி நிலைய விடுதிகளில், சத்துள்ள சிறுதானிய உணவு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுதானிய இயக்கத்திற்காக 2023-24ல் ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 'சிறுதானிய விழாக்களும்' இந்த இயக்கத்தின் மூலம் நடத்தப்படும்.
முன்னோடித் திட்டமாக நீலகிரி, தர்மபுரியில் குடும்ப அட்டைக்கு இரண்டு கிலோ கேழ்வரகு கொடுக்கப்படும்.

