'ஒரு டிரில்லியன் டாலர் பொருளியல் என்ற இலக்கை எட்ட தீர்மானித்துள்ளோம்'
சென்னை: தொழில்நுட்பமே உலகை வெல்வதற்கான சரியான கருவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் அனைத்துலக தொழில்நுட்ப மாநாட்டை காணொளி வசதி மூலம் தொடங்கி வைத்த அவர், தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எத்தகைய முன்னேற்றத்தை அடைகிறதோ அதே தொழில்நுட்ப வளர்ச்சியானது, அதே வேகத்தில் தமிழகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதே தமது கனவு என்று குறிப்பிட்டார்.
"தொழில்நுட்பம்தான்உலகை வெல்வதற்கான சரியான கருவி. அதனால்தான் அத்துறையின் கட்டமைப்பை மேம்படுத்த நினைக்கிறோம்.
"தொழில்நுட்பத்தில் சிறந்த வலிமையான மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும் புதுப்புது தொழில்நுட்பங்களுக்காக வாய்ப்புகளைக் கண்டறிவதிலும் அவற்றை தொடர்ந்து அளித்திடவும் அரசு துறைகள் ஓய்வின்றி உழைத்து வருகின்றன.
"அனைத்து தொழிற்சாலைகளின் பங்களிப்போடு, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளியல் இலக்கை எட்ட வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
மென்பொருள் சேவைகளைப் பொறுத்தவரையில், அத்துறையில் உலகளாவிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இச்சேவையை வழங்கும் முன்னணி நிறுவனங்கள் பல தமிழகத்தில் உள்ளன என்றார்.
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்கள் தொடங்கப்படவேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் 1300க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் இந்த துறையில் இயங்கி வருவதாகவும் முதல்வர் கூறினார்.
"தமிழகத்தில் சிறந்த கல்வி நிறுவனங்களைப் பெற்றுள்ளோம். உலகளாவிய வர்த்தகச் சூழலுக்குத் தேவையான ஆற்றல்மிகு வல்லுநர்களைப் பெற்றுள்ளோம். இதனை மேலும் பலப்படுத்த இந்த மாநாடு உதவ வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இம்மாநாட்டில் பேசிய தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஒரே நேரத்தில் சென்னை, ஓசூர், கோவை உள்ளிட்ட ஐந்து இடங்களில் தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்பட உள்ளது என்றார்.
மேலும், இது மிகப்பெரிய முயற்சி என்றும் தெரிவித்தார்.
இந்த நகரங்கள் உலகத்தரத்திலான வசதிகளுடன், ஆராய்ச்சி, மேம்பாட்டு வசதிகளுடன் அமைய உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் 19 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தொழில் நுட்ப வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.

