சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பார்த்து பாஜக தலைமை பயந்து விட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த நடவடிக்கைக்கு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது இல்லாமல் போய்விட்டதாகவும் தகுதி நீக்க நடவடிக்கையானது மிரட்டும் தொனி உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
"வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு முப்பது நாள்கள் தடை விதிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி முப்பது நாள்கள் வழங்கி இருக்கிறார்.
"அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். இரண்டாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது," என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்க நடவடிக்கையின் மூலம் ராகுல் காந்தியை பார்த்து பாஜக தலைமை எந்தளவுக்கு பயந்து இருக்கிறது என்பது நன்றாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ராகுல் மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் இந்த நடவடிக்கைக்கு மற்றொரு காரணம் எனக் கூறியுள்ளார்.
"தகுதி நீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல், கேள்வி கேட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல," என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 27ஆம் தேதி (நாளை) முதல் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறி உள்ளார். மோடி அரசு பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்பட்டிருப்பது தெளிவாகி உள்ளதாகச் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"மாநில, மாவட்ட அளவில்மிகப்பெரிய கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும். இது பற்றிய திட்டங்களை அகில இந்திய தலைமை வகுத்து அறிவிக்கும். இக்கூட்டங்கள், போராட்டங்கள் வாயிலாக பாஜக அரசு எதிர்க்கட்சிகளை எப்படியெல்லாம் நசுக்குகிறது என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவோம்," என்று அழகிரி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக் கையைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில்
நேற்றும் பல் வேறு பகுதி களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. குமரிசாலையில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். படம்: ஊடகம்
கே.எஸ்.அழகிரி: 27ஆம் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்

