சித்தூர்: ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாநிலங்களுக்கு இடைப்பட்ட ஏழு பேரைக் கொண்ட கும்பல் ஒன்றை முறியடித்து இருக்கிறார்கள்.
அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பல மாநிலங்களில் பல்வேறு திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
அவர்களிடம் இருந்து 1.6 கிலோ தங்கம், 6.5 கிலோ வெள்ளி, மூன்று கார்கள், ஆறு மோட்டார்சைக்கிள்கள் ஆகியவை உள்ளிட்ட ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.
சித்தூர் மாவட்ட காவல்துறை தலைவர் ரிஷாந்த் ரெட்டி இந்த விவரங்களை சனிக்கிழமை ஊடகத்திடம் தெரிவித்தார்.
அந்தத் திருட்டு கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை அதிகாரிகள் அணுகியபோது தப்பி ஓட முயன்றனர். என்றாலும் அவர்களால் தப்பிச் செல்ல முடியவில்லை.
நால்வரையும் விசாரித்தபோது பல நிலவரங்கள் தெரியவந்ததாக அதிகாரி குறிப்பிட்டார்.
அந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2 கோடி விலைக்கு ஒரு நிலத்தை வாங்கி இருக்கிறார்கள் என்றும் காவல்துறை தலைவர் கூறினார்.
அந்தச் சந்தேகநபர்களுக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கெனவே பல புகார்கள் பதியப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

