சென்னை: சளிக்காய்ச்சல் பாதிப்பு ('இன்ஃபுளுயன்சா') அறவே இல்லை என்ற நிலையை தமிழகம் எட்டி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சளிக்காய்ச்சல் பாதிப்புக்காக முதன்முறையாக அரசு சார்பில் தடுப்பூசி போடப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் சளிக்காய்ச்சல் பாதிப்பு (ஹெச்3என்2) எனப்படும் கிருமித்தொற்று பரவியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொற்றுப் பரவலைக் கண்டறிவதற்காக தமிழகம் முழுவதும் 33,544 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் இவற்றின் மூலம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
"தமிழக அரசு சார்பில் முதன்முறையாக சளிக்காய்ச்சல் பாதிப்பு பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பத்தாயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும். இந்தியாவில் முதல் முறையாக இத்தகைய முயற்சி தமிழகத்தில்தான் மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளை அணுகலாம்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
"வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களில் ஏறத்தாழ இரண்டு விழுக்காட்டினருக்கு மட்டும் தொற்று பாதிப்பைக் கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதனிடையே, நாடு முழுவதும் சளிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளிட்ட புதிய காய்ச்சல்கள் பரவி வருவதாக மத்திய சுகாதார அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அனைத்து மாநிலங்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 10, 11ஆம் தேதிகளில் நாடு முழுவதும் மருத்துவ ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒத்திகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

