பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் மறுகரையில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து முப்பது பேரை மீட்டனர்.
கடந்த இரு தினங்களாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இந்நிலையில் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளில் முப்பது பேரால் கரை திரும்ப முடியவில்லை. மறுகரையில் ஒதுங்கி நின்ற அவர்கள் மிகுந்த அச்சத்துடன் தங்களை மீட்குமாறு குரல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், முப்பது பேரையும் சிறிது தூரம் நடந்து செல்லுமாறு வழிநடத்தினர். பின்னர் சிறு பாலம் வழியாக மறுகரையிலிருந்து மீட்டனர்.
கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.
கொடைக்கானல், வட்டக்கானல் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

