நெல்லை: காவல்துறை விசாரணையின்போது தங்களின் பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்ததாக நெல்லையைச் சேர்ந்த சிலர் புகார் எழுப்பி உள்ளனர்.
துணை காவல் கண்காணிப்பாளரே இத்தகைய செயலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருப்பது நெல்லை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை காவல்துறை துணை ஆணையராக பல்வீர் சிங் ஐபிஎஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நாற்பதுக்கும் மேற்பட்டோரை அவர் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் சாடி உள்ளனர்.
காதல், கடன் விவகாரங்கள், கண்காணிப்புக் கருவிகளை உடைத்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் பல்வீர் சிங் ஐபிஎஸ் பத்துப் பேரை அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததாகத் தெரிகிறது.
அப்போது, அங்கிருந்த சில கருவிகளை வைத்து தங்களின் பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்ததாகப் பத்துப் பேரும் நெல்லை மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, விசாரணைக்காக அழைத்துச் சென்று பற்களைப் பிடுங்கியது தொடர்பாக அவர் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஒலிப்பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள காவல்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்த சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகம்மது சபீர் ஆலமை நியமித்து உள்ளார் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, பல்வீர் சிங்கைப் பணியிலிருந்து விடுவித்து, காத்திருப்போர் பட்டியிலில் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


