மதுரை: வைகை நதிக்கரையில் அமைந்துள்ள 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, நூலகத்துறை சார்பில் 'வைகை இலக்கியத் திருவிழா' நிகழ்வு மதுரையில் நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட நதியாக வைகை நதி பேசப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
"பல்வேறு இலக்கியவாதிகளின் படைப்புகள் வைகையின் சிறப்புகளை எடுத்துச் சொல்கின்றன. அதனால்தான் வைகை இலக்கிய விழா நடத்துகிறோம்.
"256 கிலோமீட்டர் நீளமுள்ள வைகை நதிக்கரையில் அமைந்துள்ள 350 கிராமங்களில் ஏறத்தாழ 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"வைகை கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருள்கள் கிடைத்துள்ளன," என்றார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
இதனிடையே, கீழடி அருகே உள்ள திருப்புவனம் பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் கிழக்கு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு குழி ஒன்று தோண்டப்பட்டது.
அப்போது, பழங்கால உறைகிணறு போன்ற அமைப்பு தென்பட்டது என்றும் அதைப் பார்வையிட்ட வருவாய்த்துறையினர், யாரும் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த உறைகிணறு குறித்து கீழடியில் உள்ள தொல்லியல் துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கீழடிக்கு அருகில் உள்ள பகுதி என்பதால், திருப்பாச்சேத்தியிலும் பழங்கால தமிழர் நாகரிகம் நீண்டிருக்கலாம் என கருதப்படுகிறது," என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

