சென்னை: புதிய கட்டடத்துக்கான திட்ட அனுமதி வழங்க 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2011-2016 காலகட்டத்தில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அலுவலகப் பயன்பாட்டுக்காக மிகப்பெரிய அடுக்குமாடி கட்டடம் ஒன்றை நிறுவ முடிவு செய்தது.
இதையடுத்து இந்தக் கட்டடத்துக்கான திட்ட அனுமதியைப் பெறுவதற்கு பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
அச்சமயம் உரிய அனுமதியை வழங்க சிஎம்டிஏ அதிகாரிகள் ரூ.12 கோடி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு லஞ்சம் கொடுத்த இரண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது.
மொத்தம் ஒன்பது அதிகாரிகள் இந்த வழக்கில் சிக்கி உள்ளதாகவும் அவர்களிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக லஞ்ச ஒழிப்புக் காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு லஞ்சம் கொடுத்தல், வாங்குதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சில நாள்களுக்கு முன்னர் பத்திரப்பதிவுத் துறை உட்பட 12 அரசுத்துறை சார்ந்த இடங்களில் ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சில ஆண்டு களுக்கு முன்பு கோடிக்கணக்கில் நடந்த லஞ்சப் பரிமாற்றம் தொடர்பில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

