குமரி: பாம்பு கக்கியதாகக் கூறி போலி நவரத்தின கற்களை விற்பனை செய்த போலி சாமியாரை நாகர்கோவில் காவல்துறை கைதுசெய்துள்ளது.
களியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 43 வயதான இவர், அண்மையில் அப்பகுதியில் நாகராஜர் கோவில் ஒன்றைக் கட்டியுள்ளார்.
பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பல்வேறு கதைகளைக் கூறிவந்துள்ளார். தாம் ஐஏஎஸ் அதிகாரி என்றும் டெல்லியில் பணியாற்றி வந்ததாகவும் அவர் பலரிடம் கூறியதாகத் தெரிகிறது. ஆன்மிகத்தின் மீதான பற்று காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கோவில் கட்டி நாகர்கோவிலில் குடியேறியதாகவும் அவர் சொன்னதைப் பலரும் நம்பியுள்ளனர்.
சில நாள்களுக்குப் பிறகு சிறப்பு பூசைகள் செய்வதாகப் பாசாங்கு காட்டிய அவர், நாக தோஷத்தைப் போக்க இந்தப் பூசைகள் உதவும் என்றார்.
இறுதியாக தாம் பல பாம்புகளுடன் ஒன்றாக வசிப்பதாகவும் இரவில் பாம்புகள் கக்கிய பல மாணிக்கக் கற்கள் தம்மிடம் இருப்பதாகவும் சுரேஷ்குமார் கூறியதை அப்பகுதி மக்கள் நம்பி உள்ளனர்.
மாணிக்கக் கற்களை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டம் என்று அவர் கூறியதை நம்பிய பலர், ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அந்தப் போலி கற்களை வாங்கிச் சென்றனர்.
லட்சக்கணக்கில் கிடைத்த பணத்தைக் கொண்டு குறுகிய காலத்தில் சொகுசு கார்களும் வீடும் கட்டினார் சுரேஷ்குமார். ஆனால் நவரத்தின, மாணிக்கக் கற்களை வாங்கிச் சென்றவர்களுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.
இதையடுத்து, தம்மிடம் உள்ள படிக லிங்கத்தை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் சிக்கல்கள் விலகும் என்று கூறி பல லிங்கங்களை விற்றுள்ளார் சுரேஷ்குமார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கோணம் பகுதியைச் சேர்ந்த லவாண்யா என்பவர் போலி சாமியார் மீது காவல்துறையில் புகார் அளித்தார். சுரேஷ்குமாரிடம் லிங்கம் வாங்கிச் சென்ற பின்னர் தன் தந்தை இறந்துபோனதாகவும் அதுகுறித்து விளக்கம் கேட்டபோது சுரேஷ்குமார் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் லாவண்யா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மேலும் சிலர் அளித்துள்ள புகார்களின் பேரில் போலி சாமியார் கைதாகி உள்ளார். அவர் பலரை இவ்வாறு ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


