சிட்னி: தமிழ்நாடு அரசு, திருத்தப்பட்ட மின்சார வாகனக் கொள்கையை அறிவித்து இருக்கிறது. அதையடுத்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'சிகோனா' என்ற நிறுவனம் சென்னையில் அடுத்த தலைமுறை மின்கலன் ஆலையை அமைக்கத் திட்டமிடுகிறது.
சிகோனா நிறுவனம் அடுத்த தலைமுறை மின்கலன் சாதனத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் நிறுவனமாகும்.
இந்திய நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் அடிப்படையில் சென்னையில் அந்த ஆலையை அமைக்க சிகோனா திட்டமிடுவதாக அதன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ்டியன் ஜோர்டன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளைப் பயன்படுத்த முயற்சிகளை முடுக்கிவிட்டு வருகிறது.
இந்த முயற்சியில் அந்த நாட்டின் 'ஊலன்கோங் பல்கலைக்கழகம்' அரசுக்கு உதவி வருகிறது.
இந்திய செய்தியாளர்கள் அந்தப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார்கள். அவர்களிடம் கிறிஸ்டியன் ஜோர்டன் பேசினார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
தன்னுடைய நிறுவனம் அடுத்த தலைமுறை மின்கலன் சாதனத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் அந்தத் தொழில்நுட்பங்கள் காரணமாக அதிகளவு மின்சாரத்தை மின்கலன்களில் சேமிக்க முடியும் என்றும் இதனால் மின்சார வாகனங்களின் விலை மிகவும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் புத்தாக்க அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் சிலிகோன் மின்கலன் தொழில்நுட்பத்தைச் சந்தைப்படுத்தி வருவதாகவும் அந்தத் தொழில்நுட்பம் ஆஸ்திரேலிய புத்தாக்கச் சாதனப் பயிலகத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக உருவாகி வந்த ஒன்று என்றும் அவர் மேலும் விளக்கினார்.
மின்கலன் தயாரிப்புத் தொழில்துறையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், கொவிட்-19க்குப் பிறகு புவிசார் அரசியல் நிலவரங்கள் மாறுகின்றன.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உள்நாட்டிலேயே மின்கலன்களைத் தயாரிக்கத் திட்டமிடுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலியாவின் சிகோனா நிறுவனம் திட்டம்

