சென்னை: அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியராகத் தகுதிபெற வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. அந்தத் தேர்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 401,986 பேர் தங்களைப் பதிவு செய்துகொண்டனர்.
ஆனால், 254,000 பேர் மட்டுமே அந்தத் தேர்வை எழுதியது தெரியவந்தது.
சுமார் 1.5 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 20,000 பேர்கூட இல்லை என்று தகவல்கள் தெரிவித்தன.
அந்தத் தேர்வில் 98 விழுக்காட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இது கல்வித் தரத்தையே கேள்விக்குறி ஆக்குவதாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து கூறி இருப்பதாகத் தெரியவருகிறது.

