திருப்பூர்: அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவிகள்- ஒரு மாணவன் ஆகிய மூவருக்கும் இடையில் இடம்பெற்ற காதல் பிரச்சினை காட்டுப் பகுதியில் பெரும் மோதலில் முடிவடைந்தது.
இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூரில் 600 மாணவ- மாணவியர் படிக்கும் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றி பல தகவல்களை ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன.
அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி, மாணவர் ஒருவரைக் காதலித்து வந்தார்.
இந்த நிலையில், அந்த மாணவனுடன் வேறொரு மாணவி வாட்ஸ் அப் மூலமாகவும் உரையாடல் இணையத்தளங்கள் வழியாகவும் பல முறை பேசி வந்தார். பல தகவல்களைத் தெரிவித்து வந்தார்.
இதனால் இரண்டு மாணவிகளுக்கும் இடையில் பிரச்சினை மூண்டது.
நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று அந்த இரண்டு மாணவிகளும் தங்கள் தங்கள் தோழிகளுடன் ஒன்று திரளத் திட்டமிட்டனர்.
அதன்படி, அந்தப் பள்ளிக்கூடத்திற்கு அருகே இருக்கும் காட்டுப் பகுதிக்குச் சென்ற சுமார் 30 மாணவிகள் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சு முற்றி கடைசியில் மாணவிகளுக்கு இடையில் குடுமிபிடி சண்டை ஏற்பட்டது. ஒரே சத்தம் கிளம்பியது.
அதைக் கேட்ட கிராமத்து மக்கள் மோதலை நிறுத்தி மாணவிகளைக் களைந்துபோகச் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் இருதரப்பு மாணவிகளிடத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.