ஸ்ரீபெரும்புதூர்: கள்ளக்காதலனுடன் தன் மனைவி மோட்டார்சைக்கிளில் சென்றதைப் பார்த்த கணவர் தானும் ஒரு மோட்டார்சைக்கிளில் விரட்டிச் சென்று மனைவியைப் பிடித்து இழுத்தார். கீழே விழுந்த மனைவி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிவா, 30, என்ற அந்தக் கணவர் கைதாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பையைச் சேர்ந்த கட்டுமான ஊழியரான சிவா, பூமாதேவி, 26, என்ற சித்தாளைக் காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
இத்தம்பதிக்கு எட்டு வயதில் மகளும் ஆறு வயதில் மகனும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பூமாதேவி கல் பதிக்கும் ஊழியரான சுந்தர் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளத் தொடங்கினார்.
இது கணவரான சிவாவுக்கு தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் இடையில் பிரச்சினை மூண்டு இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பூமாதேவி தன் கள்ளக்காதலன் சுந்தருடன் சென்றதைப் பார்த்த சிவா, தன்னுடைய மோட்டார்சைக்கிளில் விரட்டிச் சென்று மனைவியைப் பிடித்து இழுத்தார்.
நிலைதடுமாறி பூமாதேவி கீழே விழுந்ததை அறிந்ததும் கள்ளக்காதலன் சுந்தர் தப்பி ஓடிவிட்டார்.
மனைவியைத் தூக்கிக் கொண்டு சிவா மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால், பூமாதேவி ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிவா கைதானார். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

