சென்னை: தமிழகத்தில் பின்தங்கியுள்ள சிற்றூர்களில் 'டெலி மெடிசின்' மூலம் உயர் மருத்துவச் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 2,227 ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிற்றூர்களில் மட்டும் 1,800 உள்ளன.
சிற்றூர்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் மருத்துவத் தேவைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில், பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உயர் சிறப்பு மருத்துவச் சேவைகளை தொலைநிலை (டெலி மெடிசின்) முறையில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம், சூளகிரி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை இணையத் தளம் மூலம் ஒருங்கிணைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செல்வவிநாயகம் கூறுகையில், "தொலைத் தொடர்புச் சேவை இல்லாத சிற்றூர்களுக்கு அத்தகைய வசதியை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு கண்ணாடி இழை இணைய சேவை நிறுவனம் (டேன்ஃபிநெட்) தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் மலைப் பகுதிகளிலும் மிகவும் பின்தங்கிய சிற்றூர்களிலும் இணையச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.
அதைப் பயன்படுத்தி, அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெற்றிகரமாக செயல்படுத்திய பிறகு, மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

