சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.
கொரோனா தொற்றுப் பரவல் குறித்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்று குறிப்பிட்ட அவர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் தாண்டவம் ஆடுவதாகவும் தமிழகத்தில் அன்றாட தொற்றுப் பாதிப்பு தற்போது நூறாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிதாக 123 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. தற்போது மாநிலம் முழுவதும் 689 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு ஏதுமில்லை. இத்தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டது.
"உலகம் முழுவதும் உருமாற்ற 'ஓமிக்ரான்' பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற அனைத்துலக விமான நிலையங்களில் கடந்த மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சுமார் இரண்டு விழுக்காட்டினருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, சராசரியாக இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஒருவருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.
"ஆனால் இப்போதோ நாள்தோறும் எட்டு முதல் பத்து பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இதற்கிடையே, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி வந்தால் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்காது என்றும் யாரும் அது குறித்து அச்சப்பபடத் தேவையில்லை என்றும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

