ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட விருப்புரிமை நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டது?
சென்னை: தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட விருப்புரிமை நிதி, கண்ணுக்குத் தெரியாத கணக்குக்கு மாற்றப்பட்டு, அதன் பின்னர் செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயல்பாடு ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் சட்டப்பேரவையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சரின் இந்தப் பகிரங்கக் குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
"ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி மத்திய தணிக்கைத் துறையின் எல்லையை மீறியுள்ளது. கண்ணுக்குத் தெரியாத பிரிவுக்கு நிதியை மாற்றுவது தவறு என்று தணிக்கைத் துறை கூறியுள்ளது. இதை அறிந்தபின், தற்போது புதிய விதிமுறைகளுடன், சட்டப்படி செலவழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்," என்றார் நிதியமைச்சர்.
கடந்த 2018-19ஆம் ஆண்டில் ஆளுநருக்கு விருப்புரிமை நிதியாக கடந்த ஆட்சியில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு வந்தது என்றும் 2019-20இல் அது ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"அதன்பின் ஆய்வு செய்தால், அந்த ரூ.5 கோடியில் ரூ.4 கோடியை அட்சய பாத்திரா நிறுவனத்துக்கு தலா ரூ.2 கோடியை 2 தவணைகளாக வழங்கி உள்ளனர்.
"மீதமுள்ள ரூ.1 கோடி 'ஆளுநர் மாளிகை கணக்கு' என்ற கண்ணுக்குத் தெரியாத கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்தாண்டில் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதில் ரூ.1 கோடியை அட்சய பாத்திராவுக்கு கொடுக்கப்பட்டது. அதன்பின் அந்தத் திட்டமே நின்று போய்விட்டதாகத் தெரிகிறது," என்றார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1.88 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் அத்தொகை எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.
"விருப்புரிமை நிதியை ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதாக கொடுத்துள்ளனர். அந்தக் கணக்கை பார்த்தால், அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா? ஏதோ கட்சி நடத்துபவர்களுக்கு செலவு செய்யப்பட்டதா? என்ற அச்சம் வருகிறது.
"அட்சயபாத்திரம் அமைப்பு மூலம் உண்மையாகவே உணவு கொடுத்த தகவல் இல்லை. இதுபோன்று நிதி அளிப்பது ஜனநாய கத்துக்கு விரோதமானது," என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அட்சய பாத்திரம் என்பது ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டம் என்றும் ஏழைகளை அவமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், "அட்சய பாத்திரம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியதை குறைகூறவில்லை. இந்த நிதியை ஒரு காரணம் கூறி வாங்கி, அந்த காரணத்துக்குச் செலவழிக்காமல் வேறு வகையில் செலவழித்தது ஏன் என்பதுதான் கேள்வி," என்றார்.

