சென்னை: நடிகர் விஜய் இன்ஸ்டகிராம் தளத்தில் அதிகாரபூர்வ கணக்கை தொடங்கி உள்ளார். இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் நேரடி அரசியல் களத்தில் நுழைவதற்கான முதல் அறிகுறி இது என விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கருதுகின்றனர்.
மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் விஜய் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்பட்டது. டுவிட்டர் தளத்தில் மட்டுமே அவர் இயங்கி வந்தார்.
இந்நிலையில் முதன்முறையாக அவர் இன்ஸ்டகிராம் தளத்தில் கணக்கு தொடங்கி உள்ளார்.
அதன் பின்னர், ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக தனது முதல் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
'வணக்கம் நண்பாஸ் மற்றும் நண்பிஸ்' என்ற விஜய்யின் முதல் பதிவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் நேரடி அரசியலில் ஈடுபடத் தயாராகிவிட்டார் என்றும் இன்ஸ்டகிராம் தளத்தில் இ்யங்கத் தொடங்கி இருப்பது அரசியல் நுழைவுக்கான முதல் அறிகுறி என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். விஜய் தரப்பில் இது தொடர்பான எந்தவித விளக்கமும் மேலதிக தகவல்களும் வெளியிடப்படவில்லை. எனினும் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

