சென்னை: பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கலாஷேத்ரா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் (படம்) திடீரென தலைமறைவாகியுள்ளார்.
முன்னதாக ஹைதராபாத் சென்றிருந்த அவர், சென்னை திரும்பிய பிறகு காவல்துறை விசாரணைக்காக நேரில் முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் முப்பது மாணவிகளுடன் ஹைராபாத்தில் நடைபெற்ற கலாசார நிகழ்வில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பிய ஹரி பத்மன் காவல்துறை விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. அவர் ஹைதராபாத்திலேயே தலைமறைவாகிவிட்டாரா எனத் தெரியவில்லை. எனினும் ஹரி பத்மன் விசாரணைக்கு முன்னிலை ஆகவில்லை என்ற தகவலை காவல்துறை உறுதி செய்துள்ளது.
ஹரி பத்மன் தம்மைக் கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக்கொள்ள முன்பிணை பெறும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஐந்து மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதற்காக தனிப்படை ஒன்று கேரளா சென்றிருந்தது. நேற்று காலை ஐந்து மாணவிகளும் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் பல்வேறு முக்கியத் தகவல்களை அவர்கள் தெரிவித்ததாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாக்குமூலகங்களின் அடிப்படையில் ஆதாரங்களைத் திரட்டுவதில் கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே மாணவிகளிடம் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையம் சில முக்கிய விவரங்களை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

