சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும் என்றும் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் திமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்குள் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றும் திமுக தலைமை கூறியுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
நேற்று தொடங்கியுள்ள புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் வரும் ஜூன் 3ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற முன்னெடுப்புடன் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெறும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமையின் உத்தரவை அடுத்து மாநிலம் தழுவிய அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த திமுக நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
மேலும் தெருமுனைப் பிரசாரம், திண்ணைப் பிரசாரம் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களை மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

