சென்னை: பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்த கணவரைக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி சென்னைக்கு அருகே உள்ள கோவளம் கடற்பகுதியில் புதைத்த மனைவி கைதானார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெயந்தன் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார். புதுக்கோட்டையைச் சேர்ந்த 38 வயதான பாக்கியலட்சுமியும் சென்னையில் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
இருவரும் ஒருமுறை சந்தித்துக்கொண்டபோது, பாக்கியலட்சுமியின் அழகில் மயங்கிப் போனார் ஜெயந்தன். திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் கூறியபோது, ஜெயந்தன் குடும்பத்தார் தம்மை ஏற்கமாட்டார்கள் என்று தயங்கியுள்ளார் பாக்கியலட்சுமி. இதனால் தனது குடும்பத்தாருக்குத் தெரியாமல் 2020ஆம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள கோவிலில் வைத்து பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார் ஜெயந்தன்.
அதன் பிறகு அவர் சென்னை திரும்பிவிட்ட நிலையில், பாக்கியலட்சுமிக்குப் பாலியல் தொழிலைக் கைவிடுவதில் விருப்பமில்லை. அதனால் பகலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, இரவில் வீட்டில் தங்கியுள்ளார். இதை அறிந்த ஜெயந்தன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு முழுநேர பாலியல் தொழிலாளியாக மாறினார் பாக்கியலட்சுமி. இந்நிலையில் மனைவியைச் சமாதானப்படுத்திவிட இயலும் என்ற நம்பிக்கையில் அவரைத் தேடி கடந்த மாதம் 18ஆம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்றார் ஜெயந்தன். அப்போது பாக்கியலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணமாகி 19 வயதில் ஒரு மகன் இருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
ஜெயந்தன் இனி தனக்கு எதிராகத் திரும்புவார் என்று கருதிய பாக்கியலட்சுமி அவரை அடித்துக்கொன்றார். பின்னர் தனக்குத் தெரிந்த இருவரின் துணையோடு ஜெயந்தனின் உடலைத் துண்டு துண்டாகக் கூறுபோட்டு, தன்னந்தனியாக சென்னைக்கு வந்து அந்த உடல் பாகங்களை கோவளம் கடற்கரையில் புதைத்துள்ளார். தனது இளைய சகோதரரைக் காணவில்லை என்று ஜெயந்தனின் சகோதரி அளித்த புகாரின் பேரில் காவல்துறை மேற்கொண்ட விசாரணையின்போது பாக்கியலட்சுமி சிக்கினார்.

