சென்னை: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டெல்லியில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் (படம்) தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூக நீதி நம்மை இணைத்துள்ளது. சமூக நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரையறை.
உயர்சாதி ஏழைகள் என்று கூறி இடஒதுக்கீடு தருகிறது பாஜக அரசு. இது சமூக நீதி அல்ல. ஏழைகளுக்குப் பொருளாதார உதவி செய்வதை நாங்கள் எந்த வகையிலும் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதி ஆகுமே தவிர சமூகநீதி ஆகாது.
ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகள் தானே இருக்க முடியும். அதில் என்ன உயர்சாதி ஏழைகள்?
ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா? அதனால் தான் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம்.
உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது பாஜக அரசின் திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி, திறமை போய்விட்டது என்று கூறி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.
பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இடஒதுக்கீட்டை தேசிய, மாநில அளவில் கண்காணிக்க வேண்டும்.
சமூகநீதியை காக்கும் கடமை நமக்குத்தான் உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம்; புறக்கணிக்கப்பட்டோரை கைதூக்கி விடுவதுதான் சமூகநீதி.
கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சோஷலிசம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளை இந்தியா முழுவதும் நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும்.
அது தனித்தனி குரலாக இருக்கக்கூடாது. அது ஒற்றுமையின் குரலாக, கூட்டணிக் குரலாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
14 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
மத்திய புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் ஆகியவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தன. அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் மனுவை ஏற்க மறுத்து அதைத் தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதாதளம், பாரத ராஷ்டீரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, தேசிய மாநாடு உள்ளிட்ட 14 கட்சிகள் கூட்டாக இந்த வழக்கைத் தொடுத்தன.