புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர்ஏஷியா இந்தியாவின் இணையத்தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
புதுப்பொலிவு பெற்றுள்ள airindiaexpress.com இணையத்தளம் அறிமுகமான சில நாள்களிலேயே 125% அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. முதல் நாளிலேயே அனைத்துலக விமானப் பயண வருவாயில் அதன் பங்களிப்பு 25 விழுக்காட்டிற்கும் மேலாக இருந்தது.
ஏர்ஏஷியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என இரு விமான நிறுவனங்களின் சேவையை நாடுவோரும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட இணையத்தளத்தில் பயண முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இந்தப் புதிய இணைத்தளத்தின்மூலம் மேம்பட்ட பயண முன்பதிவு, ஆதரவு, பயண அனுபவம் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு முன்பதிவுக்கும் ஒரு மரம் நடப்படும் என்பதால் கரிம வெளியீட்டைக் குறைப்பதற்கும் விமானப் பயணிகளுக்கு புதிய இணையத்தளம் வாய்ப்பு வழங்குகிறது.
“வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கி, எங்களது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், மேலும் தனித்துவமான அம்சங்களையும் ஒருங்கிணைந்த சேவையையும் வழங்குவதற்குப் பணியாற்றி வருகிறோம்,” என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - ஏர்ஏஷியா இந்தியா மேலாண்மை இயக்குநர் அலோக் சிங் தெரிவித்துள்ளார்.