மதுரை: இலங்கை தமிழருக்கும், இந்திய பெண்ணுக்கும் பிறந்தவருக்கு கடப்பிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் சகாயநாதன். இவர் இந்தியாவுக்கு 1990ஆம் ஆண்டில் அகதியாக வந்து சிவகங்கை நாட்டரசன்கோட்டை முகாமில் தங்கினார்.
இவர் சிவகங்கையைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மேரி கிறிஸ்டியானாவைக் காதலித்து 2001ஆம் ஆண்டில் சிவகங்கை தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் நியாசியஸ். இவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக கடப்பிதழ் கேட்டு மதுரை மண்டல கடப்பிதழ் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார்.
அவரது பிறப்புச் சான்றிதழில் இலங்கை அகதி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், அது தொடர்பாக விளக்கம் கேட்டு கடப்பிதழ் அலுவலர் கடிதம் அனுப்பினார். இந்நிலையில் கடப்பிதழ் அலுவலர் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து தனக்கு கடப்பிதழ் வழங்க உத்தரவிடக்கோரி நியாசியஸ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நியாசியசுக்குக் கடப்பிதழ் வழங்க உத்தரவிட்டார். அது குறித்து நீதிபதி கூறுகையில், "உலகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இலங்கைத் தமிழர்கள் திரிசங்கு நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளேன். இலங்கைத் தமிழருக்கும் இந்தியாவில் பிறந்த நளினிக்கும், பின்னர் ஹரினாவுக்கும் கடப்பிதழ் வழங்க உத்தரவிட்டேன். இது நான்காவது வழக்கு.
"இந்த வழக்கில் மனுதாரர் 18.1.2002ல் பிறந்துள்ளார். இந்திய குடியுரிமைச் சட்டத்தில் 1987 ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோர் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் இந்திய குடிமகன், குடிமகள்தான். குடியுரிமைச் சட்டத் திருத்தம் 3.12.2004ல் தான் அமலுக்கு வந்துள்ளது.
மனுதாரருக்கு இரு வழிகள் உள்ளன. அவரது தாயார் இந்தியக் குடியுரிமை பெற்றவர். மனுதாரர் குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த 3.12.2004ஆம் தேதிக்கு முன்னர் பிறந்துள்ளார். இதனால் குடியுரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சத்தை நிறைவேற்றியுள்ளார்.
பிறப்புச் சான்றிதழில் இலங்கை அகதி என்றிருப்பது மனுதாரரின் தவறு இல்லை. அதிகாரிகள் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். எனவே மனுதாரருக்கு மூன்று வாரத்தில் கடப்பிதழ் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

