சென்னை: தமிழக அரசு விரைவாகச் செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக ஒப்புதல் பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நெய்வேலியில் மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களின் உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
"கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்த மாணவி நிஷா, கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன், தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனம் உடைந்த நிஷா, நேற்று முன்தினம் உயிரை மாய்த்துக்கொண்டார். இது இந்த ஆண்டில் நடந்த இரண்டாவது சம்பவம். கடந்த மார்ச் 27ஆம் நாள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபாளையத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த பத்து நாள்களில் இரண்டு மாணவர்களின் உயிரைக் குடித்துள்ளது நீட். அந்த நீட் தேர்வு இன்னும் உயிர்க்கொல்லியாகத் தொடருவதை இதன் மூலம் உணர முடிகிறது.
"நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 14 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆனால், நீட் விலக்குச் சட்டத்திற்கு இன்று வரையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது சமூக அநீதி. நீட் விலக்கு சட்டத்தை அனுமதிக்க மத்திய அரசு ஓராண்டுக்கும் கூடுதலான காலத்தை எடுத்துக் கொள்வதற்கு எந்தத் தேவையும் இல்லை. '2023 நீட் தேர்வு' மே 7ம் நாள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் மாணவ, மாணவியரிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நீட் விலக்குக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத செயலாகும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக ஒப்புதல் பெற வேண்டும்," என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

