சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் போதைப்பொருள்களும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
சோதனை, கைது நடவடிக்கைகள் நீடிக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்ட கடலோரப் பகுதியில் ஒரு படகில் இருந்து 300 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் ஏகே47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு விநியோகிக்க கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புலனாய்வு அதிகாரிகள் நடத்தி வந்த விசாரணையின் ஓர் அங்கமாக திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஒன்பது பேர் கைதாகினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, இரு நாள்களுக்கு முன்பு சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.87 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
எனினும், இந்த நடவடிக்கை குறித்து மேலதிகத் தகவல்கள் எதையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் போதைப்பொருள், துப்பாக்கிகளை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு விநியோகிப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையை கேரள புலனாய்வு அதிகாரிகள்தான் மேற்கொண்டனர் என்பதும் உறுதியாகி உள்ளது.

