தர்மபுரி: வருவாய் ஆய்வாளரும் தாசில்தாரும் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டப்பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், ஓசூர் மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் 54 வயதான சுரேஷ்குமார் என்பவர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 1.40 ஏக்கர் நிலத்துக்கு ஈடாக ரூ.13 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள சில நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படுவதாக சுரேஷ்குமார் கூறி வருகிறார்.
எனவே, தமக்கு கூடுதல் தொகையை இழப்பீடாக வழங்கக் கோரி அவர் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு பிரிவு தாசில்தாரிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே மேல்முறையீடு மனு அளித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவரது தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற சுரேஷ்குமார், அங்கு தாசில்தார் தர்மராஜிடம் தனது மனு மீதான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என விசாரித்ததாகத் தெரிகிறது.
அப்போது இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் மூண்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இருவரும் ஆட்சியர் அலுவலகம் என்றும் பார்க்காமல், அரசு அதிகாரிகள் என்பதையும் மறந்து கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
இதில் இருவருக்குமே உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இருவரையும் அங்கிருந்தவர்கள் விலக்கிவிட்டு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து தர்மபுரி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

