நெல்லை: நிலத் தகராறு காரணமாக மருமகளைக் கொலை செய்த மாமனாரை நெல்லை காவல்துறையினர் கைது செய்தனர். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் கைதானார்.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜு. இவரது மகன் தமிழரசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவியான 26 வயது முத்துமாரி தனியாக வசித்து வருகிறார்.
தங்கராஜின் மகன் தமிழரசன் தன் மனைவி பெயரில் நிலம் வாங்குமாறு கேட்டுக்கொண்டு தந்தைக்குப் பணம் அனுப்பி உள்ளார். ஆனால் தங்கராஜுவோ அந்தப் பணத்தில் தன் பெயரில் நிலத்தை வாங்கி பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த முத்துமாரி தனது கணவரிடம் விவரம் தெரிவிக்க, தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முத்துமாரி தன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த தங்கராஜு, தன்னைப் பற்றி மகன் தமிழரசனிடம் கோள் மூட்டியதாக மருமகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்து தாக்கியதில் முத்துமாரி படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
இதனால் பயந்துபோன தங்கராஜு முத்துமாரியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.
இதையடுத்து காவல்துறை தங்கராஜுக்கு வலைவீசியது. பல இடங்களில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், முத்துமாரியின் இருசக்கர வாகனம் நெல்லையில் உள்ள திரையரங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்தது.
அவர்கள் விரைந்து சென்று, அங்கு படம் பார்த்துக்கொண்டிருந்த தங்கராஜுவைக் கைது செய்தனர்.

