பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து ஆவேசம்
சென்னை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விருத்தாசலத்தில் பள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அப்பள்ளியின் உரிமையாளரான திமுக கவுன்சிலர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் அதே கருத்தை முன்வைத்தார்.
அவர்களுக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "விருத்தாசலத்தில் உள்ள தனியார் மழலையர், தொடக்கப்பள்ளியில் பயிலும் ஆறு வயதுச் சிறுமி இம்மாதம் 11ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற பின்னர், வயிறு வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
"அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதை மருத்துவர் கண்டறிந்தார்.
"சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளியின் தாளாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
"சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறேன்," என்று கூறினார்.
"பக்கிரிசாமியின் திமுக அடிப்படை உறுப்பினர் நிலை ரத்து செய்யப்பட்டு, கட்சியிலிருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
"இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் விசாரணை மேற்கொள்கிறார்," என்று திரு ஸ்டாலின் கூறினார்.
"இந்த அரசைப் பொறுத்தவரை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம். எனவே இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று முதல்வர் உறுதி அளித்தார்.

