சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான வட்டச் சாலையை மீன் கடைகளும் உணவகங்களும் ஆக்கிரமித்து உள்ளதால் அங்கு செல்வோர் வாகனங்களை சாலைகளில் நிறுத்துகின்றனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கை நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்தது.
அதில், "பொதுச் சாலைகளை இவ்வாறு ஆக்கிரமிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இவற்றை அகற்றி இம்மாதம் 18ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்," என்று மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை இலக்கை எவ்வாறு எட்ட இயலும் என்றும் அவர்கள் வினா எழுப்பினர்.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மெரினா கடற்கரை வட்டச் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கினார்கள்.
மீன் கடைகள் அகற்றப்படுவதை அறிந்ததும் 100க்கு மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டனர். கடைகளையும் உணவகங்களையும் அகற்றுவதை எதிர்த்து மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவைக் காட்டி காவல்துறை உதவியுடன் பணிகள் தொடரவே, பெரும்பாலான மீனவர்கள் கடைகளில் இருந்த தங்கள் பொருள்களையும் மீன்களையும் எடுத்துச் சென்றனர்.
அகற்றப்படாமல் இருந்த பொருள்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

