முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் வசிக்கிறார் ராமாயி.
1913ஆம் ஆண்டு பிறந்த இவருக்குச் சிறுவயதிலேயே திருமணமாகி சில ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டார். குழந்தைகள் யாரும் இல்லை.
சொந்தங்களுடன் வசித்தாலும் தானே சமைத்து உண்கிறார். கிராமத்தில் சுளுக்கு, மூச்சுப் பிடிப்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் 'மாந்தம்' போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துவதில் ராமாயி கைதேர்ந்தவர்.
இவ்வாறு சேவை செய்யும் பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாட கிராம இளையர்கள், விளையாட்டுக் கழகத்தினர், ஊர் மக்கள் ஆகியோர் முடிவு செய்தனர். அதன்படி ராமாயி பாட்டியின் 110வது பிறந்தநாளில் அவருக்குப் புத்தாடைகள் வழங்கி, கேக் வெட்டச் செய்தனர்.
ராமாயி 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈஸ்டர் தினத்தில் ஊர் மக்களுக்குப் பாயாசம் செய்து இலவசமாக வழங்குவார். முதுமை காரணமாக அதனை நிறுத்தி விட்டார்.
எனவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாயாசம் தயாரித்து மூதாட்டியின் கையால் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

