மதுரை கல்லூரி மாணவி புகார்; கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு
மதுரை: கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் மதுரை கல்லூரியைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்களைக் காவல்துறை கைதுசெய்தது. மேலும் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் ஊரக வளர்ச்சித்துறையின் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஜெகன் கருப்பையா என்பவர் மீது அக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி புகார் அளித்துள்ளார்.
அம்மாணவிக்கு இப்போது 17 வயதாகிறது. அவருக்கு உதவிப் பேராசிரியர் ஸ்டாலின் என்பவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பேராசிரியர்கள் இருவருக்கும் அக்கல்லூரி மாணவர் கருப்பசாமி என்பவர் இந்த விவகாரத்தில் உதவிகரமாக இருந்த தாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அம்மாணவி மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை அணுகி தமது புகாரை நீதிபதியிடம் நேரடியாக அளித்தார்.
புகாரைப் பெற்ற நீதிபதி, மதுரை மாவட்ட டிஐஜி பொன்னி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன், அது குறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.
அதன் பின்னர், மாணவியின் புகாரின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த இரு பேராசிரியர்கள், கல்லூரி மாணவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தீவிர விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் முடிவில், நேற்று பேராசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். காவல்துறை விசாரணை தொடங்கியதுமே, மாணவர் கருப்பசாமி தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், கைதான பேராசிரியர்கள் இருவரும் மற்ற மாணவர்களுக்கு இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனரா என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதை அடுத்து, மதுரை காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தென்மண்டல காவல்துறை தலைவர் ஐஜி அஸ்ரா கார்க், டிஐஜி பொன்னி உள்ளிட்ட அதிகாரிகள் அத்தனியார் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால், கைதான பேராசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர்கள் மீது மேலும் சில மாணவிகள் மட்டுமன்றி, உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர் புகார் அளித்து இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

