சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 502 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த மாநிலத்தில் மொத்தம் 3,048 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறின.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கொவிட்-19 தொற்று அதிகரித்து வருகிறது.
அரசு மருத்துவமனை, இதர பொது இடங்களுக்குச் செல் வோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி வருகிறது.
புதிதாக கிருமி தொற்றியோரில் ஆண்கள் 254 பேர், பெண்கள் 248 பேர்.
ஐக்கிய அரபு சிற்றரசுகள், இலங்கை, மலேசியாவில் இருந்து வந்தோரில் தலா இருவருக்கும் தாய்லாந்து, பங்ளாதேஷ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
மாநிலத்தில் தொற்று அதிகரித்து வருகிறது என்றாலும் சென்ற அலைகள் அளவுக்கு இப்போது பாதிப்பு அவ்வளவாக இல்லை என்று கூறப்படுகிறது.
ஆகையால் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்ற ஒரு முடிவை மாநில நிர்வாகம் இன்னமும் எடுக்கவில்லை என்று நேற்று தகவல்கள் கூறின.
இருந்தாலும்கூட ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; கைகளைச் சுத்தமாக சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்;
காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடம்பு வலி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்; கொரோனா உறுதியானால் குணமடையும் வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

