திருப்பத்தூர்: சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகர்களில் 20 ஆண்டுகளாக திருடி வந்த 60 வயது ஆடவர் 2வது மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பிடிபட்டார்.
ஹாரி பிலிப்ஸ் என்ற அந்தத் திருடர், குடிபோதையில் தன்னை மறந்து தூங்கியபோது அவரை அதிகாரிகள் வளைத்துப் பிடித்துவிட்டனர்.
அவரிடம் இருந்து 47 பவுன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. அதிகாரிகள் அந்த ஆடவரையும் அவருடைய இரண்டாவது மனைவியான காந்திமதியையும் விசாரித்து வருகின்றனர்.
ஹாரி பிலிப்ஸ் பல தொழில்களைத் தொடங்கி நடத்திப் பார்த்தார். ஒன்றுகூட உருப்படவில்லை.
ஆகையால், திருட்டு ஒன்றுதான் தனக்குக் கைகொடுக்கும் என்று முடிவு செய்து அந்தத் தொழிலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.
அவர் நினைத்ததைப் போலவே திருட்டு மூலம் பெரும் நகைகள், பணத்தைத் தனதாக்கிக் கொண்டு ஆடம்பரமாகச் செலவிட்டார்.
ஹாரியின் முதல் மனைவியும் பிள்ளைகளும் அவரைக் கைவிட்டுவிட்டனர். அதனால், ஹாரி, 50 வயதான காந்திமதியை இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார்.
சென்னையில் மட்டும் ஹாரி மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன என்று காவல்துறை தெரிவித்தது. இதுவரை ஹாரி 23 முறை சிறைக்குச் சென்றிருக்கிறார்.
ஹாரி பல இடங்களில் நகைகளையும் பணத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சீனிவாசன், 62, என்பவர், தன் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 120 பவுன் தங்க நகை, 4000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனதாக காவல்துறையில் புகார் தெரிவித்தார்.
அந்த வீட்டில் கைவரிசை காட்டியது திருப்பத்தூரைச் சேர்ந்த ஹாரிதான் என்பதை கண்காணிப்புப் படச் சாதனங்கள் காட்டிக்கொடுத்தன. அதையடுத்து ஹாரி பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர்.

