சென்னை: சங்க இலக்கிய சொல்லியல் அனைத்திற்கும் இப்போது தொல்லியல் ஆதாரம் கிடைத்து இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமைபட குறிப்பிட்டார்.
மிகமிகப் பழமையான சிந்து சமவெளி நாகரிகம், தொன்மையான தமிழினத்திற்கே உரியது என்றும் சிந்து சமவெளி பண்பாட்டிற்குச் சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழர்களுக்கே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை முத்தையா ஆய்வு நூலகம் சார்பில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய 'ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை' என்ற நூலை வெளியிட்டு பேசிய முதல்வர், சங்க இலக்கியங்களைத் திராவிட இயக்க மேடைகளில் முழங்கியபோது, 'இதெல்லாம் இலக்கியம்தானே. வரலாறு இல்லையே' என்று பலரும் நிராகரித்ததைச் சுட்டிக்காட்டினார்.
அந்த சொல்லியல் அனைத்திற்கும் இப்போது தொல்லியல் ஆதாரம் கிடைத்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டார்.
சிந்து சமவெளி நாகரிகம் 5,000 ஆண்டுகள் பழமையானது. அந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்களே என்பதற்கான ஆதாரங்கள் மேலும் மேலும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒடிசா மாநில முன்னாள் மாவட்ட ஆட்சியரும் தமிழியல், இந்தியவியல் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் அந்த நூலை எழுதி இருக்கிறார்.
அவர், சிந்து பண்பாடு பரவியிருக்கும் குஜராத், மகாராஷ்டிரா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் போன்ற இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, அங்கு பற்பல தமிழ்ப் பெயர்கள் இருப்பதை நூலில் பதிவிட்டுள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

