சென்னை: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளிக்குக் கூடுதல் உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் மாற்றுத்திறனாளிகள் மானியம் தொடர்பான விவாதத்தின்போது சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அதனைத் தெரிவித்தார்.
"மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, பயனாளியின் பங்குத் தொகையைச் செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடன் உதவி வழங்கப்படும்.
"உயர்கல்வி பயிலும் பார்வை அற்ற மாணவர்கள் 1,000 பேருக்கு ஆளுக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் நவீன வாசிக்கும் கருவிகள் வழங்கப்படும்," என்று அமைச்சர் கூறினார்.
தற்போது இரு கால்களும் இல்லாதோருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அது ஒரு கால் மட்டும் பாதிக்கப்பட்டோருக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
"உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும்.
"தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் விபத்து, நிவாரணம், மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றுக்கான உதவித்தொகை உயர்த்தப்படும். அதற்காகக் கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்," என்றார் அமைச்சர் கீதா ஜீவன்.
காது கேளாதோர் பயனடையும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு நடத்தும் கூட்டங்களில் காது கேளாதோருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்க இத்திட்டம் உதவும் எனக் கூறப்பட்டது.
"மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு நிதி உதவி பெறும் 92 ஆரம்பநிலைப் பயிற்சி மையங்கள், 56 மறுவாழ்வு இல்லங்கள், மனநலம் குன்றியோர்க்கான 70 பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தப்படும்.
"அரசு நிதி உதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 326 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளைப் பராமரிக்க மாதந்தோறும் ரூ.4,500 மதிப்பூதியத்தில் பராமரிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்படுவர்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசு மறுவாழ்வு இல்லங்களில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து தங்கி உள்ள 592 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவூட்டு மானியம் உயர்த்தப்படவிருக்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களை மீண்டும் சமுதாயத்தில் ஒருங்கிணைப்பதற்காக மீண்டும் இல்லம் எனும் புதிய திட்டம் முதல்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு விழுக்காடு இடஒதுக்கீட்டின்கீழ் அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணிஇடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படும். இதனால் 22,300 மாணவர்கள் பயன்பெறுவர் என்று கூறப்பட்டது.
மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மூன்று இல்லங்கள் கட்டப்படும்.
அரசு நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலைப் பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு, மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
மேலும், கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று முதல்வர்் மு.க.ஸ்டாலின் சார்பில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

