சென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் தொகுப்பை, காது கேளாதோர் புரிந்துகொள்ளும் வகையில் சைகை மொழியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தற்போது நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை, சைகை மொழிபெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்கக் காணொளியாகத் தயாரித்து, செய்தித் துறை வாயிலாக அதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கான சைகை மொழியில் பதிவுசெய்யும் நிகழ்ச்சியை பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்குப் பொது இடங்களில் தடையற்ற சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைச் சுட்டியுள்ளது.

