சென்னை: மாமல்லபுரத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அனைத்துலக அலைச்சறுக்குப் போட்டி நடைபெறவிருக்கிறது.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அதனைத் தெரிவித்தார்.
தமிழக அரசின் இளையர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு அலையாடல் சங்கம், இந்திய அலையாடல் சம்மேளனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் முதல்முறையாக அனைத்துலக அலைச்சறுக்குப் பொதுப் போட்டியை நடத்துகின்றன.
அந்தப் போட்டிக்காக, தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு கோடியே 67 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அலைச்சறுக்குப் போட்டி சங்கத்திடம் வழங்கினார்.
பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அரங்கிலும் அனைத்துலக நிலையிலும் தனித்துவத்தை உறுதிசெய்யும் தமிழகம், அண்மைக் காலமாக 'சர்ஃபிங்' எனும் அலைச்சறுக்கு விளையாட்டை ஊக்குவிப்பதில் முன்னணி வகிக்கிறது.
2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அலைச்சறுக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் இலக்கை எட்டும் வகையில், அலைச்சறுக்கு விளையாட்டாளர்களுக்கு அதி நவீன வசதிகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றை அமைத்துத் தருவதில் தமிழக அரசு கவனம் செலுத்திவருகிறது.
அனைத்துலக வல்லுநர்கள் உதவியுடன் விளையாட்டாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

