பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி தொடர்கிறது என்பதுதான் பாஜக, அதிமுக தலைவர்களின் கருத்தாக உள்ளது.
அதன் அடிப்படையில், மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்து இருந்தது.
ஆனால், பாஜக தரப்பிலிருந்து எந்தவித ஒப்புதலும் அதிமுகவுக்குக் கிடைக்கவில்லை.
எனவே பாஜக மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக தனியே களமிறங்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசன் (படம்) போட்டியிடுவார் என்று நேற்றுக் காலை பழனிசாமி அறிவித்தார்.
புலிகேசி நகர் தொகுதியில் ஏற்கெனவே பாஜக வேட்பாளராக முரளி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்க்கும் விதமாக அதிமுகவும் அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது.

