காஞ்சிபுரம்: சொந்த பயன்பாட்டுக்காக தன் வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்த்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான கண்ணுசாமி கைதானார்.
அவரது மகன் கைபேசியில் எடுத்த காணொளியை நண்பர்களுடன் பகிர்ந்ததால் கண்ணுசாமி சிக்க நேர்ந்தது.
43 வயதான அவர் திடீரென வீட்டில் சிறு தொட்டி அமைத்து கஞ்சா செடியை வளர்க்கத் தொடங்கினார்.
மனைவி சந்தேகப்பட்டு விசாரித்தபோது, தாம் வளர்ப்பது புளித்தகீரை என்று கூறியுள்ளார் கண்ணுசாமி.
அந்தச் செடி சுமார் மூன்று அடி வரை வளர்ந்த நிலையில், பள்ளியில் படித்து வரும் அவரது மகன், கஞ்சா செடியை காணொளியாகப் படம்பிடித்து, 'எங்கள் வீட்டில் வளரும் கஞ்சா செடி' என்று குறிப்பிட்டு, நண்பர்களுடன் பகிர்ந்துள்ளான்.
அதை ஏராளமானோர் மற்றவர்களுடன் பகிர, காவல்துறைக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்ணுசாமி கைதானார்.

