சென்னை: நள்ளிரவில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக 33 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இளையர்கள் பலர் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் செல்வது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாகசங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது.
காவல்துறை பலமுறை எச்சரித்தும் இளையர்களின் போக்கு மாறவில்லை.
இதையடுத்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைத் தடுப்புகள் அமைத்து காவல்துறை கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளையர்கள் இருசக்கர சாகசங்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்தது.
அப்போது 33 இருசக்கர வாகனங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். 33 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரி கிறது.
முன்னதாக கைது, வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, இளையர்கள் சிலர் வாகனத்தில் ஏறி ஓட்டம் பிடித்தனர். எனினும் காவலர்கள் சில கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களைப் பிடித்தனர்.
இந்தச் சம்பவங்கள் திரைப் படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போல் இருந்ததாக நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

