நாள்தோறும் 12 மணி நேர வேலை; எதிர்ப்பை மீறி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
சென்னை: வாரந்தோறும் நான்கு நாள்கள் வேலை, மூன்று நாள்கள் விடுமுறை என்ற புதிய சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.
இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் இம்மசோதா நிறைவேறியது.
தற்போது தொழிற்சாலைகளில் தினமும் எட்டு மணி நேரம் வேலை, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதை மாற்றியமைக்க வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதா ஒன்றைக் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.
தமிழகத்தில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளதாகவும் தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை இருந்தால் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் திட்டமிட்டபடி சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் எதிர்ப்பையும் மீறி, சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தமிழக தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு, புதிய சட்டத்திருத்த மசோதா குறித்து விளக்கம் அளித்தார். தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் சில சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும் அரசு அவற்றை அளிக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ள அம்சங்கள் குறித்து ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்றார் அவர். அதே சமயம் புதிய மசோதாவை ஏற்றுக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு மட்டுமே அதில் உள்ள விதிமுறைகள் பொருந்தும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
"தொழிலாளர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். நான்கு நாள்களுக்கு இந்த இலக்கை அடைந்துவிட்ட நிலையில், ஐந்தாவது நாளும் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்கு சம்்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும்.
"தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவால் தொழிலாளர்களுக்கான பணி நேரம், வார விடுமுறை தொடர்பாக எந்தப் பாதிப்பும் இருக்காது," என்று தமிழக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கூறியுள்ளார்.
புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், இது யாருக்கும் கட்டாயம் இல்லை எனவும் தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்்படி செயல்படலாம் என்றும் தெரிவித்தார்.

